Pages

Search This Blog

Wednesday, October 6, 2010

தீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்த சிதம்பரம் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாதனை படைத்தவர் கலைஞர்

தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் கலைஞர் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

கீழ்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பல கிராமங்களுக்கு வந்திருக்கின்றேன்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே சீர்காழியிலே உங்களை எல்லாம் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைவதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே நான் மாணவனாக இருந்தபொழுது இந்தப் பகுதிகளுக்கெல்லாம் அடிக்கடி அழைக்கப்பட்டு வந்திருக்கின்றேன். பல கிராமங்களுக்கு வந்திருக்கின்றேன். இதில் சில கிராமங்களுக்கு நடந்தும் வந்திருக்கின்றேன்.

இன்னும் சில கிராமங்களுக்கு சைக்கிளின் முன் பகுதியிலே அமரவைத்து அல்லது பின்கேரியர் பகுதியிலே என்னை அமர வைத்து தோழர்கள் கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்காக அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். அது வள்ளுவக் குடியானாலும், அது பனங்காத்த குடியானாலும், இன்னும் பல்வேறு பகுதிகள் ஆனாலும் எல்லா பகுதிகளுக்கும் இடையறாது போய் பார்க்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றவன். ஒவ்வொரு வாரமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே இருக்கிறபொழுது வாரவிடுமுறை விடுவார்கள். அந்த விடுமுறைகளில் இந்த வட்டாரத்துத் தோழர்களும் என்னை அழைத்து வருவார்கள். அதிக விளம்பரம் எல்லாம் கூட கிடையாது. தெருமுனைப் பிரச்சாரங்கள் போல கூட்டம் இருக்கும். திராவிடர் விவசாய சங்கம்-அய்யா பக்கிரிசாமி அவர்களைப் பற்றிச்சொன்னார்கள்.

தந்தை பெரியார் காலத்தில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சிறப்பாக இயங்கிய நிலையிலே பல்வேறு நிலைகளிலே இந்த இயக்கக் கொள்கைகள் பரப்பப்பட்டன. இடையறாது கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற எனக்கு ஒரு இடைவெளி இருந்ததே என்று மனதிலே சங்கடமாக இருந்தது.

மாபெரும் விழாவாக...

ஆனால் அந்தச் சங்கடமெல்லாம் இன்றைக்கு நீங்கக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய திருவிழாவாக. ஒரு அறிவு பூர்மான விழாவாக, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி மிகச்சிறப்பாக நடைபெறக் கூடிய அளவிலே, இப்படிப்பட்ட கொள்கைகளை சொல்லக்கூடிய ஒரு அரசு இந்த நாட்டிலே இருக்கிறது.

இந்த ஆட்சியின் அமைச்சர்கள் கொள்கை விளக்கக் கர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பெற்றிருக்கின்றார்.

எடைக்கு எடை நாணயம் கொடுத்தீர்கள்

நீங்கள் எனக்கு எடைக்கு எடை நாணயம் கொடுத்தீர்கள். அதற்காக தலைவணங்கி நன்றி செலுத்துகின்ற நேரத்திலே, அந்த நாணயம் தந்தை பெரியார் அவர்களாலே, அன்னை மணியம்மையார் அவர்களாலே உருவாக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகள் அனாதை என்ற சொல்லை நாங்கள் எப்பொழுதும் சொல்லுவதில்லை.

நாகம்மையார் குழந்தைகள் காப்பகம்

திருச்சியிலே அய்யா அவர்களாலே உருவாக்கப் பட்ட குழந்தைகள் இல்லம் 50 ஆண்டுகள் கடந்து பொன்விழா கொண்டாடியிருக்கின்றோம்.

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நீங்கள் அன்போடு கொடுத்த நாணயம் அதனுடைய வளர்ச்சிக்கு சேர்க்கப்படும் என்பதை மகிழ்ச்சியாக உங்களுக்கு எடுத்துச்சொல்லுகின்றோம். அதோடு ஏழு தீர்மானங்கள் முத்தாய்ப்புத் தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

சீர்காழி ஜெகதீசன்

அது மட்டுமல்ல, பகுத்தறிவுச் சுடரை ஏந்துவீர் என்ற நல்ல நூலை நம்முடைய சீர்காழி ஜெகதீசன் அவர்கள் எழுதியிருக்கின்றார். அவர் நல்ல கவிஞராகவும் இருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது.

அவர் அடிக்கடி கடிதம் எழுதுவார். அவர் அரசு ஊழியராக இருந்த காலகட்டத்திலேயிருந்து பகுத்தறிவாளராக இருந்தவர். அவர் மாற்றலாகி எங்கு போனாலும்-அங்கு அவர் சிறப்பாகத் தோழர்களை ஒருங்கிணைத்து நடத்துவார்.

எனவே அந்தக் காலகட்டம் வரையிலே மிகத் தெளிவாகத் தெரியும். அதைத்தான் பேராசிரியர் பழமலய் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். ஒரு ஆய்வுரையாக சுருக்கமாகப் பேசினாலும் கூட, இன்னும் விளக்கமாக அவர் பேசுவார். ஆய்வுரை போல அவர் எழுதிய நூலிலே கருத்துகள் இருக்கின்றன.

இதைப் பற்றி நான் பின்னாலே சொல்லு கின்றேன். நேரம் அதிகமாகிவிட்ட காரணத்தாலே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பெரியாரின் அறிவார்ந்த நூல்கள்

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அறி வார்ந்த நூல்கள். குடிஅரசு ஏடுதான் தமிழ் நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சி னைகளை எல்லாம் 80 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாங்கள் வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு தொகுதிகளை வாங்கிப் பார்த்தால் தெரியும். இதுவரையிலே நாங்கள் 19 குடிஅரசு தொகுதிநூல்களை வெளியிட்டிருக்கின்றோம்.

புத்தகங்களை வாங்கிப் பரப்புங்கள்

அதுபோல தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜருடைய கருத்துகளை உள்ளடக்கிய தகுதி, திறமை, புரட்டு போன்றவற்றைப் பற்றிய நூல்கள். அது போலவே பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டு வருகின்ற 87 வயதானாலும் இளைஞராக இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களுடைய கருத்துகள் போன்ற எல்லா நூல்களும் இங்கேயிருக்கின்றன.

நீங்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றீர்கள். இந்தநேரத்தில் அதிக நேரத்தை நாம் பயன்படுத்த முடியாது என்ற காரணத்தினாலே அந்தப் புத்தகங்களை நீங்கள் படியுங்கள். பிறருக்கும் கொடுக்க வேண்டும், பரப்ப வேண்டும் என்று அன்போடு உங்களை நாங்கள் வேண்டிக்கொள் கின்றோம்.

அருமை நண்பர்களே, தந்தை பெரியார் அவர்கள் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது. இதிலே அவர்கள் பெற்றிருக்கிற வெற்றிகளைப் பற்றி எனக்கு முன்னாலே பேசிய அத்துணை பேரும் மாண்புமிகு அமைச்சர் உள்பட, எல்லோரும் ஒவ்வொரு கோணத்திலும் எடுத்துச்சொன்னார்கள். மூடநம்பிக்கை ஒழிப்பதிலே, மனித உரிமைகளைப் பெறுவதிலே தந்தை பெரியார் அவர்கள் தோற்றிய சுயமரியாதை இயக்கம் அதன் இன்றைய வடிவமான திராவிடர் கழகம் எப்படி எல்லாம் இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறது!

இரட்டைக் குழல் துப்பாக்கி

அரசியல் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து நடத்திக்கொண்டு வருகின்றது என்பதை உங்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

நான் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விழைகிறேன். இந்த சீர்காழிக்கு வரும்பொழுது நந்தன் கதை நினைவுக்கு வரும். நந்தன் என்பவன் இருந்தானா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சி இல்லை. இருந்ததாகவே வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் நந்தனார் சரித்திரத்திலே அவரை எப்படி எவ்வளவு கொடுமையாக நடத்தியது பார்ப்பனீயம்?

உழைப்பின் உருவங்கள்

ஜாதி தத்துவம், வர்ணாசிரம தர்மம். நம்முடைய உடன் பிறந்த சகோதரர்களுக்குக் கூட உழைக்கக் கூடிய பாடுபடக்கூடிய, பாட்டாளி மக்களாக இருக்கக்கூடிய, சமுதாயத்தைச் சார்ந்தவர்களை எல்லாம் அவர்கள் வயலிலே இறங்கி நாற்று நட்டால்தான் இவர்கள் சோற்றிலே கைவைக்க முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உழைப்பின் உருவங்களாக இருக்கக்கூடிய நம்முடைய சகோதரர்களை எப்படி நடத்தினார்கள்?

நம்முடைய சகோதரர்களை எவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதற்கு அடையாளம் எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தால் கூட, நாத்திகனாக இருக்க வேண்டிய அவசிய மில்லை. கடவுளை மறுக்கிறவனுக்காக தண்டனை என்று சொன்னால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை பக்திக்காகவே வைத்திருக் கிறார்களே, அந்த நந்தன் சரித்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

பக்கத்திலே இருக்கிறது சிதம்பரம். இப்பொழுது ரயிலில் ரொம்ப சீக்கிரம் போகலாம். ஆனால் அன்றைக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போக முடியாது.

தில்லைக்குப் போவது ஏதோ வானவெளிப் பயணம் மாதிரி ஒரு மிகப்பெரிய இலக்கு-அந்தக் காலத்தில். ஆனால் இன்றைக்கு இந்த மண்டலத் திற்குப் போகலாமா? அந்த மண்டலத்திற்குப் போகலாமா என்று ஆராய்ந்து கொண்டிருக் கிறார்கள். தில்லை சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டுமென்பது கதைப்படி நந்தனுக்கிருந்த மிகப்பெரிய ஆர்வம்.

தரிசனம் செய்ய தீட்சிதர்கள், அய்யர்கள் விடவில்லை. கோயிலுக்கு நிலம் எப்படி வந்தது? நம்முடைய மன்னர்கள் செய்த வேலை. மன்னர்கள் சதுர்வேதி மங்கலங்களாகக் கொடுத்தார்கள். இறையிலி நிலங்களாகக் கொடுத்தார்கள். மன்னர்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து வரிகூட கட்ட வேண்டாம் என்று அப்படியே கொடுத்தார்கள். உத்தமதானபுரங்கள்

அப்படியெல்லாம் உருவாகித்தான் இன்றைக்கு உத்தமதானபுரங்கள் இருக்கின்றன. சதுர்வேதி மங்கலங்கள் இருக்கின்றன. நந்தன் தில்லைக்குச் சென்று நடராஜரை வழிபடவேண்டும் என்று சொல்லுகின்றார். அவரை அனுப்பக்கூடாது என்பதற்காக ஒரு நிபந்தனை போடுகிறார் அவருடைய எஜமானன்.

அவ்வளவு வயலிலும் உள்ள நெல்லை விளைய வைத்து விட்டுச்செல்ல வேண்டும் என்று சொல்லு கின்றார். பார்ப்பனர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் வேறு கிடையாது.

கல்நெஞ்சப் பார்ப்பான்

அன்றைக்கே எழுதி வைத்துவிட்டார்கள்-காகத்தையும் படைத்து கல்நெஞ்சப் பார்ப் பானையும் ஏன் படைத்தாய்? என்று. படைத்தானா? இல்லையா? என்பது அப்புறம்.

நந்தன் கவலையோடு படுக்கச்செல்கின்றார். கனவில் நடராஜரை வேண்டிக்கொள்கின்றான். பொழுது விடிந்து பார்த்தால் அவ்வளவு நிலமும் விளைந்து போய்விட்டது.

நந்தன் சிதம்பரத்திற்குப் போய் அங்கு நடராஜர் பெருமானை தரிசிப்பதுதான் அவருடைய நோக்கம். கடவுள் பக்தியைப் பற்றி நினைக்கின்ற பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏன் தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார்? ஏன் கடவுள் மறுப்பாளர்கள் வந்தார்கள் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.

முதல்வர் கலைஞரின் சாதனை

தில்லைவாழ் அந்தணர்கள், தீட்சிதர்கள் சிதம்பரம் கோயில் எங்களுக்கே உரியது என்று ஆணவத்தோடு சொன்னார்கள்.

காலம் காலமாக இருந்த ஆணவத்தை, அந்த தீட்சிதர்களின் ஆதிக்கத்தை முறித்து அது இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறைக்கு உரியதுதான் என்று ஆக்கிய பெருமை வரலாற்றிலே முதல்வர் கலைஞர் அவர்களுடைய சாதனைகளிலே தலை சிறந்த சாதனை.

இன்றைக்கும் உச்சநீதிமன்றத்திற்குப் போய் அல்லாடிக் கொண்டிருக்கின்றான். ஆனால் நடராஜர் பெருமான் காலைத் தூக்கியவர் அப்படியே நிற்கிறார். இன்னும் அவர் காலை கீழேகூட போடவில்லை. கொடுமைக்கார தீட்சிதர்கள்

தீட்சிதர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள்? ஜாதியை சொல்லுவதற்காக மன்னிக்க வேண்டும். நீ பறையன், நீ கீழ்ஜாதிக்காரன், நீ நடராஜரை தரிசிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

நீ உயர்ந்த ஜாதி ஆனால்தான் கடவுளை வணங்கமுடியும். அப்பொழுதுதான் கடவுளைப் பார்க்க முடியும் என்று வைத்திருக்கின்றான். மனுதர்மத்தில் இதைத்தான் எழுதி வைத்திருக் கின்றான். சூத்திரனுக்கு கடவுளைத் தொழ உரிமையே இல்லை என்று எழுதி வைத்தி ருக்கின்றான்.

இதுதான் மனுதர்மத்தில் மிகத் தெளிவாக இருக்கின்ற வாசகம். அதனால்தான் சம்பூகன் கடவுளைப் பார்க்கத் தவம் செய்தான் என்று தெரிந்தவுடன் அவனை வாளால் வெட்டிக் கொன்றான் என்பது கதை. கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்? நந்தா தீக்குளித்துவிட்டு வா என்று சொன்னார்கள்.

நீ முதலில் குளித்துக்காட்டப்பா!

நந்தன் தீக்குளித்தார். தீயிலிருந்து எழுந்து வந்தார் என்று சொன்னார்கள். தீயிலிருந்து எழுந்து வந்தாரா? என்று பகுத்தறிவு உள்ள எல்லோரும் யோசனை செய்வார்கள். இன்றைக்கு எப்பேர்ப்பட்ட பக்தனையும் கொஞ்சம் தீக்குளித்துவிட்டு வா என்று சொன்னால் சரிங்க என்று ஷவரில் குறிக்கிறமாதிரி குளித்து வருகிறேன் என்று யாரும் சொல்லமாட்டான். முதலில் நீ குளித்துக்காட்டப்பா அப்புறம் நான் வருகிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிந்திக்கின்ற யுகம் இந்த யுகம்.

நந்தன் நடராஜர் பெருமானை எப்படியும் தரிசித்து விட வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு போகிறார். நந்தன் வெளியேதான் நிற்கிறார் அப்பொழுதுகூட. நந்தன் நிலங்களை விளைய வைத்துவிட்டுச் சென்றார். அடுத்து தீக்குளித்தார். எல்லாம் தடை ஓட்டத்தில் தாண்டித் தாண்டி வந்துவிட்டார்.

கருணையே வடிவான நடராஜ பெருமான் என்ன செய்தார்? தன்னுடைய பக்தன் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லி கதவைத் திற உடனே வா என்று சொன்னாரா? சொல்லவில்லை. அவர் அப்படியே நின்று கொண்டிருக்கின்றார்.

நந்தியே, சற்று விலகியிரும் பிள்ளாய்!

நந்தி மறைத்துக்கொண்டிருக்கிறது. சிவபெரு மான் என்ன சொல்லியிருக்க வேண்டும்? பக்தா உள்ளே வா. நீதான் மேல்ஜாதிக்காரனாக தீட்சிதர் களுக்கு சொந்தக்காரனாக ஆகிவிட்டாயே. ஆகவே பரவாயில்லை உள்ளே வரலாம் என்று சொல்லி கட்டி அணைத்தார் என்கிற கதை இருக்கிறதா? இல்லை.

மாறாக உங்களுக்குத்தெரியும். நடராஜர் நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய் என்று கதைப்படி சொன்னாராம். அதனால் வெளியவே நிற்கிறார் நந்தனார். உயர்ஜாதி ஆனபிற்பாடும் கூட.

சிவபெருமான் சொன்னவுடனே நந்தி விலகுகிறது. அங்கிருந்துதான் கும்பிட்டார். உடனே தேவர்கள் மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டார்கள்.

நந்தன் நெருப்பில் விழுந்தவுடனே அவர் மோட்சத்திற்குத்தான் போயிருப்பார். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

(-தொடரும்)
http://viduthalai.periyar.org.in/20101005/news13.html

No comments:


weather counter Site Meter