Pages

Search This Blog

Thursday, October 7, 2010

தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் யோக்கியதை

தார்மீகம் பேசும் பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை கருநாடக மாநிலத்தில் அங்க மச்ச அடையாளங்களுடன் வெளிரிப்போய்விட்டது. எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்த நாள் தொட்டே, அங்கு உள்கட்சிக் குழப்பம் - பதவிச் சண்டை சிண்டைப் பிடித்துக்கொண்டு பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது.

அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் சேர்க்கை என்பது அங்கு வாடிக்கையான வேடிக்கையாகவே ஆகி விட்டது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி கருநாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். ஆறு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.

தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கருநாடக எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த சொகுசு ஓட்டலில் தங்கினர். 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர். ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டு வரும் 12 ஆம் தேதி மாலைக்குள் தமது பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களையும், முதலமைச் சருடன் கருத்து மாறுபாடு கொண்ட அமைச்சர்களையும் சரி கட்ட பல முனைகளிலும் கடும் முயற்சியை மேற்கொண்ட எடியூரப்பாவிற்கு இறுதியில் தோல்வி முகம்தான்.

மறுபடியும் சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். உப்பு அதிகமாகப் போய்விட்டது என்று தண்ணீர் ஊற்றுவதும், தண்ணீர் அதிகமாகப் போய்விட்டது என்று உப்பை அள்ளிப் போடுவதும் போன்ற பரிதாப நிலைக்கு, தடுமாற்றத்திற்கு, பெரும் குழப்ப நிலைக்கு ஆளாகிவிட்டார் கருநாடக முதலமைச்சர்.

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் ரூ.30 கோடி கொடுத்து தம் பக்கம் இழுப்பதாகப் பரபரப்புக் குற்றப் பத்திரிகை படித்திருக்கிறார். பா.ஜ.க.வின் யோக்கியதைக்கு இதைவிட வேறு சான்று தேவைப்படாது.

தொடக்கத்தில் ரெட்டி சகோதரர்களால் (இருவருமே அமைச்சர்கள்) பிரச்சினை பேருரு எடுத்தது. கட்சியின் மேலிடம் நேரடியாகத் தலையிட்டு ஒட்டு வேலை செய்துவிட்டுப் போனார்கள். விளக்கெண்ணய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைதான் அங்கு.

அமைச்சர் ஒருவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது, நண்பரின் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதைவிட வேறு கேவலம் எங்கேயிருக்கிறது? அடேயப்பா, பக்தியை இவர்கள் போல் கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இரண்டு கண்கள் என்பார்கள். இவர்களின் தெய்வ பக்தி, தங்கி இருந்த வீட்டுக்கே ரெண்டகம் செய்வதுதானா? இவர்கள்மீது குற்றம் சொல்லி என்ன பயன்? இவர்கள் நம்பும், வழிபடும் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதைகளே இந்தத் தரத்தில்தானே இருக்கின்றன? சின்ன வயதில் வெண் ணெய்யைத் திருடினான் என்றும், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் என்றும் தங்கள் கடவுள்கள்பற்றிப் பெருமையாக பேசும் இவர்களின் புத்தியும், செயல்பாடுகளும் இவற்றை மீறி இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவிருந்த காட்டா சுப்பிரமணிய நாயுடு நில மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே, சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் சாட்சியத்தைக் கலைக்க லஞ்சம் கொடுத்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டு, இப்பொழுது சிறைக் கொட்டடியில் கிடக்கிறான்.

தென்மாநிலத்தில் கருநாடகத்தைப் பிடித்துவிட்டோம்; அடுத்தடுத்து தென்னக மாநிலங்களில் எங்கள் ஆட்சி வரும் என்று இறுமாப்போடு பேசிக் கிடந்தவர்கள், கைக்குக் கிடைத்த அந்த ஒரே ஒரு மாநில ஆட்சியைக்கூடத் தக்க வைத்துக்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. பொதுமக்கள் வெறுப்படையக் கூடிய செயல்பாடுகள்தான் நாள்தோறும் - நாள்தோறும்.

கோயில் கோயிலாகச் சென்று கும்பிடு தண்டம் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மூட நம்பிக்கையில் கிடந்துழலுகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.

கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று தமிழ்நாட்டுக் கோயில்களுக்கெல்லாம் சென்று கும்பிடு தண்டம் போட்டு, நன்கொடைகளை வாரி இறைத்து வருகிறார்.

தம்மைச் சுற்றியுள்ள சொந்தக் கட்சிக்காரர்கள்மீது நம்பிக்கையை இழந்து, குழவிக் கற்கள்மீது நம்பிக்கை வைப்பவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - வெட்கக்கேடு.

சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் என்னதான் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும், உண்மைதான் விஞ்சி நிற்கும் - அதுதான் இப்பொழுது கருநாடக மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது!

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், எடியூரப்பாவின் கீழ்க்கண்ட ஒப்புதல் வாக்குமூலமே பா.ஜ.க.வின் யோக்கிய தைக்குப் போதுமானது.

ஓட்டுக்காக அரசியலில் புகுந்து பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யக் கூடாத பணிகளைச் செய்து வருகிறோம்.

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம். மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலைதூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினா மாவை ஏற்றுக்கொண்ட போதும், நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் என்று கூறியவர் வேறு யாருமல்லர் - கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா - மறைந்த கரு நாடக மாநில முதலமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார் (தினமலர், 4.12.2009).

தனக்குத்தானே இப்படி ஒரு நடத்தைச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்; வேறு விளக்கமும் தேவையோ!
http://www.viduthalai.periyar.org.in/20101007/news07.html

No comments:


weather counter Site Meter