Pages

Search This Blog

Thursday, October 21, 2010

சேற்றில் புதைந்த யானையின் கதை!

அயோத்திப் பிரச்சினையில் அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு கட்டப் பஞ்சாயத்து முறையில், மூட நம்பிக்கைக்கு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து மகுடம் சூட்டிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்று கூறி பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் வகையில் பேசித் திரிகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்ற வாளிகளின் பட்டியலில் உள்ளவர்கள் இப்பொழுதே விடுதலை அளிக்கப்பட்டதுபோல துள்ளிக் குதிக் கிறார்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணம் சொன்ன அடல் பிகாரி வாஜ்பேயி, அயோத்திப் பிரச் சினை தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு தாமதம் ஆனதால்தான் பாபர் மசூதி இடிக் கப்பட்டது என்று இடிப்புக்கு நியாயம் கற்பித்தார். இவர் எல்லாம் ஒரு பிரதமர் - அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்ற அவதரித்தவர் என்று நாட்டு மக்கள் நம்பித் தொலையவேண்டும்.

அலகாபாத் தீர்ப்பு - பாபர் மசூதி இடிப்புக் குற்ற வாளிகளைக் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல வில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னார் என்றவுடன் அவர்மீது பாய்ந்து பிராண்டு கிறார்கள்.

காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடலை எப்படி பயன்படுத்தலாம் என்று எகிறிக் குதிக்கின்றனர்.

முஸ்லிம் பயங்கரவாதம் என்று பார்ப்பன ஏடுகளும், சங் பரிவார்க் கும்பலும் பயன்படுத்தியபோது பாயாசம் சாப்பிட்டதுபோல இருந்தது - உள்துறை அமைச்சர் என்கிற முறையில் தகவல்களை அதிகாரப்பூர்வமாகக் கையில் வைத்துக்கொண்டுள்ளவர் காவிப் பயங்கர வாதம் என்று அடையாளம் காட்டும்போது ஆத்திரம் அலை புரள்கிறதே - ஏன்? உண்மையைச் சொன்னால் எரிச்சல்தானா?

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் ஆட்டம் போட்டபோது, குண்டுவெடித்தபோது - அவை எல்லாம் முசுலிம்கள் முதுகின்மீது ஏற்றி முஸ்லிம் தீவிரவாதம் என்ற முத்திரையும் குத்தப்பட்டது.

2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், மே மாதத்தில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத் 2008 செப்டம்பரில் மாலேகான் முதலிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தபோது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, இந்த வன்முறைகளின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் குறிப்பாக சிமி என்ற முஸ்லிம் அமைப்புதான் இருக்கிறது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிட்டன. உளவுத் துறையும் கூட இப்பிரச் சினையில் தடுமாறிவிட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மகா ராட்டிராவில் தீவிரவாத தடுப்புப் படை அதிகாரியாக (ATS) ஹேமந்த் கர்கரே பொறுப்பேற்ற நிலையில்தான், உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணி யில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்கள் திட்ட மிட்ட வகையில் வட்டமாகச் சூழ்ந்துள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பெண் சாமியார் பிரக்யாசிங் சாத்வி, சங்கராச் சாரியார் தயானந்த பாண்டே, இராணுவத் துறையைச் சேர்ந்த புரோகித் உள்ளிட்டவர்களின் சதி வலைப் பின்னல் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதே!

அகம்பாவம் பிடித்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் கலகலத்தது - வந்தது ஆபத்து என்று கவட்டிக்குள் தலை வைத்துக் கவிழ்ந்து படுத்தனர்.

இதற்கிடையே மும்பை தாஜ் ஓட்டல் பயங்கர வாதிகளால் தாக்கப்பட்டதைப் பயன்படுத்தி காவல் துறையில் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட வரும், இந்தியாவின் தொடர் வன்முறைகளுக்குக் காரணமாக இருந்த சங் பரிவார் வட்டாரத்தை வெளி உலகுக்குக் காட்டியவருமான கர்கரே சந்தேகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மகாராட்டிர மாநிலக் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம். முஷ்ரீப் வெளிப்படையாகவே நூல் ஒன்றை வெளியிட்டார். மத்திய அமைச்சரான அந்துலே அவர்களேகூட காவல்துறை அதிகாரி கர்கரே கொல் லப்பட்டதில் சதி இருக்கிறது என்று கூறவில்லையா?

உண்மைகள் எல்லாம் இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்கள் உத்தமபுத்திரர்கள் போல வன்முறை முத்திரையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பார்களேயானால் - அது, சேற்றில் புதைந்து கொண்டிருக்கும் யானை வெளியில் வர திமிரத் திமிர மேலும் மேலும் ஆழமாகப் புதைந்து போகும் நிலையைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றோம்!

No comments:


weather counter Site Meter