Pages

Search This Blog

Saturday, February 26, 2011

மே மாதம் வரை பொறு தினமணியே

மித்திரபேதம், சிண்டு முடிதல், மரை கழற்றுதல் (Nut loose theory) என்பது போன்ற சொல்லாடல்களைக் கேள்விப்பட்டு இருக்கலாம். இவை பற்றி நிதர்சனமான காட்சிகள் தேவை என்றால் தினமணி, கல்கி, துக்ளக் ஏடுகளைப் படித்தால் போதும், ஓகோ! இதுதானா அந்த அசிங்கங்கள் என்பது பொலபொல வென உதிர்ந்துவிடும்.

எடுத்துக்காட்டாக கோபத்தில் காங்கிரஸ் ; தயக்கத்தில் தி.மு.க. என்ற ஒரு கட்டுரை (25-2-2011) தினமணியில்(http://www.dinamani.com/edition/story.aspx?artid=381901).

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிபற்றி பேச்சு வார்த் தைகள் நடந்து வருகின்றன - சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று இரு தரப்பைச் சேர்ந்தவர் களும் கூறியுள்ள தகவல்கள் நாளும் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்படியும் அமைந்து விடக்கூடாது என்பதிலே அடடே, இவர்களுக்கு ஏற்பட்டு வரும் ஆவேசமும் அரிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.

இவர்களின் தலைவியான அம்மையார் வெளிப்படை யாகவே பேசினார். காங்கிரசை ஆதரிக்கத் தயார்! அ.தி.மு.க. வோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தயார்! நீங்கள் தயார் தானா? என்று வெட்கத்தை விட்டே வெளிப்படையாகப் பேசினார்.

காங்கிரஸ் பிடி கொடுக்கவில்லை; ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளாக தி.மு.க. வுடனான எங்கள் கூட்டணி உறுதியான ஒன்று என்று அக்கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறி மூக்கை ஒட்ட நறுக்கிவிட்டார்.

அ.தி.மு.க. வோடு தே.மு.தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், த.மு.மு.க. போன்ற கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை, பா.ம.கவுடன் தெளிவான வகையில் கூட்டணி வரையறுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலிய கட்சிகள் உறவு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

அது எப்படி? தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டு சேரலாம்? அதைத்தான் பார்த்துவிடுவோமே என்று கோதாவில் குதிப்பது போல தினமணி தனக்கே உரித்தான மித்திர பேதத்தில் தன் யானைக் காலைப் பதித்துள்ளது.

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. 15 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டதால், அதன்படி 90 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

கடந்த தேர்தலில் இருந்த நிலை இப்பொழுது தி.மு.க. வுக்கு இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தவிக்கும் ஆளும் கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் கை கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் தி.மு.க. தரத்தான் வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கை தி.மு.க. தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்? என்கிறது தினமணி.

- இந்த இடத்தில் தி.மு.க.வின் மூக்கைச் சொறிந்து விடும் வேலை.

வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு -மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள் வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள், குறைந்த பட்ச செயல்திட்டம், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கட்சிகளின் ஒருங்கிணைப் புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் தி.மு.க.வுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு தி.மு.க. தரப்பு விதிர் விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

- இந்த இடத்தில் காங்கிரசின் மூக்கைச் சொறிந்து விடும் வேலை.

அரிப்பு எடுத்தவன் ரத்தம் சொட்டச் சொட்ட சொறிந்து அற்ப சுகம் அனுபவிப்பது போல் தினமணி தினவெடுத்துச் சொறிந்து அற்ப சுகம் அனுபவிக்கும் பரிதாபத்தை என்ன சொல்ல!
இவ்வளவுக்குப் பிறகும் கூட ஆசை வெட்கம் அறியாது என்பது போல எழுதுகிறது தினமணி.

ஒரு வேலை தி.மு.க. தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மூன்றாவது அணி அமைத்துப் போட்டி யிட காங்கிரஸ் தயங்காது என்று டில்லியிலிருந்து சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அ.தி.மு.க.வுடன் முதல் கட்டப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும் தே.மு.தி.க.வே கூட கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக் கொடி காட்டக் கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள் - என்று மேலும் எழுதுகிறது தினமணி.

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில்லுண்டித் தனம்! அது நிறைவேறாத நிலையில் இந்தக் கூட்டணி அமையப் போவதில்லை பாருங்கள் என்று எரிச்சல் - சாபம்!

தன் ஆசைகளைக் கற்பனைக் குதிரையாக்கி சவாரி செய்கிறது தினமணி கும்பல்.

அ.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும்! அது அமையாது போய்விட்ட நிலையில் இப்படியாவது எழுத்துகளைச் சோறாக்கி விழுங்கி தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது.

தினமணி வைத்தியநாதய்யரே காங்கிரசில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பது போலவும், நேரில் எல்லாவற்றையும் அறிந்தாற் போலவும் சாமர்த்தியமாக எழுதிட முயற்சித்துள்ளார்.

எத்தனையோ அரசியல் ஜாம்பவான்களையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டவர் கலைஞர். இந்தத் தினமணி சுண்டெலிகள் பூணூல் ஜாக்கெட் போட்டு மினுக்கிப் பார்க்கின்றன.

1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இப்படித்தான் வேட்டி இடுப்பில் இருக்கிறதா, நழுவி விட்டதா என்றுகூடத் தெரியாமல் கூச்சல் போட்டது தினமணி.

அய்யப்பனையும், பிள்ளையாரப்பனையும் வேண்டிக் கொண்டது நாள்தோறும் தினமணி.

முடிவு என்ன? 1967 இல் 138 இடங்களில் வென்ற தி.மு.க. 1971 இல் 183 இடங்களில் அல்லவா வாகை சூடியது?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே கடைசியில் சரணாகதி அடைந்துவிட்டாரே!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. மகா புருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்துவிட்டனர் என்று ராஜாஜி கையொப்பம் போட்டு அறிக்கை வெளியிடவில்லையா?

மே மாதம் வரை பொறு தினமணியே! மேள தாளத்தோடு உங்களை அனுப்பி வைக்க தமிழர்கள் மிக ஆர்வத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- மின்சாரம்

No comments:


weather counter Site Meter