Pages

Search This Blog

Thursday, November 25, 2010

சேர்ந்தே இருக்கவேண்டுமா? தனியாக இருக்கவேண்டுமா? சொல்லுங்கள், யோசிக்கிறோம்-முதலமைச்சர் கலைஞர் உரை

மத்திய அரசு, மாநில அரசுகள் என்று சிலர் தனியே பிரித்துப் பேசுகிறவர்களுக்கு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பதிலளித்துள் ளார்.

தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (24.11.2010) நடைபெற்ற வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:-


மத்திய அரசை விட்டுவிட்டுச் செய்வதில்லை

நம்முடைய அரசு உங்களுடைய ஒத்துழைப் போடு, உறுதுணையோடு எத்தனையோ திட்டங் களையெல்லாம் தீட்டியிருக்கிறது. இந்த அரசு திட்டங்களை தீட்டுகிறபோது, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுகிறது என்கிறபோது, இந்த அரசு என்று நான் குறிப்பிடும்போது சில பேர் தமிழ்நாட்டில், நான் ஏதோ மாநில அரசை, தமிழக அரசை மாத்திரம்தான் குறிப்பிடுகிறேன் என்று கருதிக்கொண்டு, மத்திய அரசுக்கு இதில் பங்கு கிடையாதா என்றெல்லாம் கேட்கிறார்கள். மத்திய அரசு என்று எதைச் சொல்லுகிறோம், அது மாத்திரமல்ல, இந்த நாட்டில் எந்தக் கட்சிக்காரர் களும் அதிகமாகச் சொல்லாத வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். மத்திய அரசு என்கிறபோது, மத்திய அரசு என்று மாத்திரம் நான் சொல்லுவதில்லை, இந்தியப் பேரரசு என்று சொல்லுகிறேன். பேரரசு என்றாலே இந்த அரசும் உள்ளிட்டதுதான், அதுதான் பேரரசு. நாங்கள் சிற்றரசுதான். இந்த சிற்றரசுகள் எல்லாம் அடங்கியதுதான் பேரரசு. நாங்கள் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்றால், மக்களுக்காக ஒரு சாதனை புரிகிறோம் என்றால், மக்களுக்காக ஒரு செயலை முடிக்கிறோம் என்றால், அவர்களுக்காக ஒரு திட்டத்தை வகுக்கிறோம் என்றால், அந்தத் திட் டத்தைச் செயல்படுத்துகிறோம் என்றால், அதிலே மத்திய அரசை விட்டுவிட்டு செயல்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் எட்டடி பாய்ந்தால் நாங்கள் பதினாறடி பாய்வோம். அந்த எட்டைக் கூட்டித் தான் பதினாறு - நான் அதை மறக்கவில்லை. அந்த எட்டடியையும் கூட்டித்தான் பதினாறடி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் கணக்கிலே அவ்வளவு முட்டாள் அல்ல. அந்த எட்டடியோடு சேர்த்துதான் பதினாறடி பாய்வோம் என்று நான் சொல்லுகிறேன். நாங்கள் தனியாக பதினாறடி பாய்வோம் என்று சொல்லவில்லை. தனியாக பதினாறடி பாயக்கூடும் என்று தான் அண்ணா காலத்திலே அப்படிக் கேட்டோம், நாங்கள் தனியாகப் பதினாறடி பாய வேண்டும் என்று. இல்லையில்லை, சேர்ந்தே பதினாறடி பாய்வோம் என்று சொன்ன பிறகுதான் அவர்களை நம்பி, சேர்ந்தேயிருக்கி றோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்! யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும். திராவிட நாடு, தமிழ் நாடு என் றெல்லாம் ஒரு காலத்திலே கேட்ட போது, தமிழ் நாடு தனி, தமிழ்நாட்டின் திட்டங்கள் தனி, பக்கத்து நாடுகளின் திட்டங்கள் தனி, என்ற அந்த அளவிலே தான் எங்களுடைய உரிமை, எங்களுடைய பொரு ளாதாரத்திற்கு ஏற்ற, பயன்பாடுகளுக்கு ஏற்ற திட்டங்கள் இவைகளெல்லாம் எங்களுக்குத் தேவை என்ற முறையிலேதான் இந்த அரசு - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே உள்ள இந்த அரசு தொடக்க காலத்தில் அந்தக் கருத்தை வெளி யிட்டது. அப்படிச் சொன்னபோது, எங்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை என்ன?

நாமெல்லாம் ஏக இந்தியா அல்லவா? ஒரே இந்தியா அல்லவா? நாங்கள் போடுகிற திட்டங் களும், நீங்கள் போடுகிற திட்டங்களும் மக்களுக்குப் பயன்படக் கூடியவை அல்லவா? என்று கேட்டு நாங்களும் யோசித்து, ஆமாம்! எங்களால் அதைப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை என்று கேட்ட போது, அதைப் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய அள விற்கு நாங்கள் பயனளிக்கிறோம் என்று சொன்ன போது, அதை நம்பித் தான் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக இருப்பதற்குக் காரணமே, நீங்கள் எங் களை என்றைக்கும் வளத்தோடு வாழ வைப்பீர்கள் - ஒரு பகுதி வாழ்வதும், ஒரு பகுதி வீழ்வதும் என்ற நிலைமை இந்தியாவிலே இருக்காது. இந்தியா சமமாக இருக்கும். இந்தியாவிலே எல்லா பாகங் களும் சமமாக இருக்கும். ஒரு பாகம் உயர்ந்து, ஒரு பாகம் நலிந்திருக்கக்கூடிய நிலைமை இந்தியத் திருநாட்டிலே இருக்காது என்று எண்ணித்தான், நம்பித்தான் இன்றைக்கு தென்னகப் பகுதி, தமிழகப் பகுதி வடக்கே உள்ள பகுதிகளோடு கலந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு, இந்தியா வின் ஒற்றுமை இவைகளெல்லாம் தமிழர்களுக்கு மாத்திரம் தானா என்றால், இல்லை. நாங்களும், நீங்களும் சேர்ந்து தான் இந்தியர்கள். நாங்கள் மாத் திரம் என்றால் தமிழர்கள் அல்லது திராவிடர்கள். நாங்களும் நீங்களும் சேர்ந்துதான் இந்தியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தியர்களுக்காகத் தீட்டப்படுகிற திட்டம் - அது எந்தத் திட்டமாக இருந்தாலும், இந்தியாவிலே இருக்கின்ற எல்லா மக்களும் பயன்பெறவேண்டிய திட்டம். இந்தியாவிலே இருக்கின்ற தெலுங்கர்களுக் கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற கன்னடியர்களுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற பஞ்சாபிகளுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம்.

பாகுபாடு இருக்கக் கூடாது

ஆனால், எல்லாம் சேர்ந்த இந்தியர்களுக்கான திட்டமென்றால், அதிலே பாகுபாடு இருக்க முடி யாது, இருக்கக்கூடாது. இருந்தால், இந்தியாவிலே பல மாநிலங்களை, பல பிரதேசங்களை, பல இனங்களை அவமதித்த குற்றத்திற்கு நாம் ஆளா வோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த வகையிலே இது யாருடைய திட்டம், இது மாநில அரசின் திட்டமா? மத்திய அரசின் திட்டமா? என் றெல்லாம் சில பேர் குழப்பி, மாநில அரசின் திட்டங் கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இன்றைக்கு இருக்கின்றன என்று யாராவது சொல் லுவார்களேயானால், மாநில அரசுத் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள்தான் என்று மக்களைக் குழப்ப முன்வருவார்களேயானால், நான் அவர்களுக் குச் சொல்லுகிறேன் - நாங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இதிலே இருப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து வழிவிடுங்கள். இதைத்தான் நான் சொல்ல முடியும்.

மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று நான் கருதாத காரணத்தால், இரண்டும் ஒரே அரசுதான் - மத்தியிலே ஒரு காரியம் நடந்தால் அது மாநிலங்களைப் பாதிக்கக்கூடியதுதான் என்பதை நான் எண்ணுகிறவன், யோசிப்பவன், சிந்திப்பவன். அதனால்தான், இரண்டையும் ஒரே அரசாகக் கருதுகிறேன். மாநிலம், மத்தி என்பதெல்லாம் நிருவாக வசதிக் காக பிரிக்கப்பட்டவைகள். அதற்காக இன்றைக்கு இருக்கக் கூடியவைகள். அதை மறந்துவிடக்கூடாது. மாநிலம் - மத்தி என்ற இந்த இரண்டு தத்துவங்களும் நிருவாகத்திற் காக இருப்பவைகளே தவிர, பேதங் களுக்காக அல்ல, பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனை யாளர்கள் நிச்சயமாக மறந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். படித்த மக்கள் நீங்கள், வேளாண் துறையிலே பணியாற்று கின்ற நீங்கள், இவைகளை யெல்லாம் சிந்திக்க முடியாதவர்கள் அல்லர், சிந்திக்கக் கூடியவர்கள். அப்படிச் சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்ற இந்தக் கூட்டத்தில் உங்களுடைய சிந்தனைக்கு கொஞ்சம் எரு போட்டதைப் போல, தீனி போட் டதைப் போல இந்தக் கருத்துகளைச் சொல்லியி ருக்கிறேன். உங்களுக்கே இது பயன்படுமேயானால், உங்களையும் என்னையும் சேர்த்து ஆளுகின்ற வர்களுக்கு - மாநிலத்திலே இருந்து ஆளுகின்றவர்க ளுக்கு, ஏன் மத்தியிலும் இருந்து ஆளுகின்றவர்க ளுக்கு - அப்படி ஆளுகின்ற கட்சிகளுக்கு - மாநி லத்தை, மத்திய அரசை ஆளுகின்ற கட்சிகளிலே உள்ளவர்களுக்கு இது புலப்படாமல் போக முடியாது.

ஒரு குழந்தையை இரு தாய் உரிமை கோரிய கதை

எனவே, எந்த ஒரு திட்டம் ஆனாலும், வேளாண் மைத் துறைக்காகப் போடப்படுகிற திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்திலும் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. அதைப் போலவே, மத்திய அரசு திட்டத்தில் மாநில அரசுக்குப் பங்கு இருக்கிறது.

ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று தாய் உரிமை கொண்டாடினால்கூட, அதிலே தந்தைக்குப் பங்கில்லாமல் இல்லை. தந்தைக்கும் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை தன்னுடைய குழந்தை என்று இரண்டு தாய்கள் அதற்காகப் போராடிய போது, சாலமன் காலத்திலே அவரு டைய சபா மண்டபத்தில், சாலமன் என்ற அந்த மன்னன் தீர்ப்பு கூறினான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் - இது உன்னுடைய குழந்தை அல்ல, அந்த அம்மாவுடைய குழந்தை, அந்த அம்மாதான் கண்ணீர் வடிக்கிறார்களே, கொடுத்துவிடு என்ற போது - இன்னொருத்தி, முடியாது என்றாள். பிறகு யோசித்துப் பார்த்து, கடைசியாக முடிவு செய்தான் - சரி, இந்தக் குழந்தையை என்னுடைய வாளால் வெட்டி, இரண்டு துண்டாக்கி, ஆளுக்கொரு துண்டு கொடுக்கிறேன். எடுத்துக் கொண்டு போங்கள் - என்று சொன்ன போது, அந்த போலித்தாய், சரி, சரி என்றாள். ஏனென்றால், குழந்தையைத் துண்டாக்கி னால் என்ன, அதைத் துண்டு துண்டாக ஆக்கினால் என்ன, கவலையில்லை. ஏனென்றால், அவள் உண் மையான தாய் அல்ல. அதே நேரத்தில், உண்மை யான தாய் என்ன சொன்னாள்? அய்யோ! குழந்தை யைத் துண்டாக்காதீர்கள். அது என் குழந்தை. வெட்டி விடாதீர்கள். வேண்டுமானால் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள். குழந்தை உயி ரோடு இருந்துவிட்டுப் போகட்டும். அவளிடத்திலே கொடுத்து விடுங்கள். அவளே தாயாக இருந்து விட் டுப் போகட்டும் என்று சொன்னாள். அதற்கு என்ன காரணம்? குழந்தை உயிரோடு இருக்கவேண்டும். அதுதான் அந்த உண்மையான தாயின் சிந்தனை.

உண்மைத் தாயின் நிலையிலிருந்து சொல்கிறேன்

அதைப் போல, அந்தத் தாயின் நிலையிலிருந்து நான் சொல்லுகிறேன். யாராவது இருந்துவிட்டுப் போகட்டும், யார் வீடு கட்டினால் என்ன, யார் ரோடு போட்டால் என்ன, யார் செய்தால் என்ன, 108 திட்டத்தை யார் நிறைவேற்றினால் என்ன, யார் பல்கலைக்கழகங்களை நடத்தினால் என்ன, யார் வேளாண்மைத் துறையை வகித்தால் என்ன - மக் களுக்கு திட்டங்கள் பயன்பட்டால் போதும். அது பயன்படுகிற வரையில், அது எனக்கு, உனக்கு என் றெல்லாம், நான்தான் அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்வது, நான்தான் பெற்றேன் என்று போலித்தாய் பங்குக்கு வருவது போன்ற கதை யாகிவிடும். குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் - இந்தியாவினுடைய சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் - இந்தியாவினுடைய சுதந்திரத்தைக் காத்து, அதை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வேளாண்மைத்துறை அன்பர்கள் கூடியிருக்கின்ற இந்தக் கூட்டத்தை ஓர் பயிற்சி வகுப்பாக நான் ஆக்கிவிட்டேனோ, என்ற அந்த வருத்தத்தோடு, அந்த வருத்தத்திலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நீங்கள் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்த்து அதற்கேற்ப நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங் களுடைய இனிய வரவேற்பு, எழுச்சி மிகுந்த வாழ்த் துக்கள் இவற்றுக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, நம்முடைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் அவர்களின் கோரிக்கைகள் முழுவதும் இன்று நிறைவேறாவிட்டாலும்கூட, அவரும் அமரக்கூடிய அமைச்சரவைக் கூட்டத் திலே, இந்த நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் ஆழ்ந்த பரிசீலனையோடு அமலாக்கப்படும். அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

துணை முதலமைச்சர் இன்றைக்கு முன் நின்று நடத்தும் காரியமாக ஏழை, எளியவர்க்கு இலட்சக் கணக்கான வீடுகள் கட்டுவதற்கான கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - ஒரு மாபெரும் திட்டம். அதன் படி, 21 இலட்சம் வீடுகள் 6 ஆண்டுக் காலத்திலே கட்டப்பட வேண்டும். இந்த முதல் வருடத்திலே 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. அநேகமாக முடிக்கப்படப் போகிறது. அவ்வளவு வீடுகள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் அழுத்தமாக, உறுதியாகக் கட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 21 லட்சம் குடிசை வீடுகள் கல் வீடுகளாக, கான்கிரீட் வீடுகளாக ஆக இருக்கின்றன. 6 வருடங்களில் - 6 வருடங்களா, அவர்கள் வந்து செய் வார்களா என்றால் வரமாட்டார்கள், கவலைப்படா தீர்கள் நாமே அதை செய்து முடிப்போம் என்று சொல்லி முடிக்கின்றேன். - இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101125/news02.html

No comments:


weather counter Site Meter