Pages

Search This Blog

Sunday, November 21, 2010

கார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டி கைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக் காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.

எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை.

அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவை களின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகை யைப் பற்றி எழுதியிருந்தோம்.

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள் இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பத்துகோடி ரூபாயும், அனா வசியமாய் துணிவாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழைமக்கள், கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங் களை குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர் களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபா வளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்ட தன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்த தோடல்லாமல், கடன்வாங்கி நஷ்ட மடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபா வளிக்கு முன் சில நாட்களும், தீபா வளிக்குப்பின் சில நாட்களும், தீபா வளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுக் களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்களு டைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ் வளவு! அரசியல் காரியங்கள் நடை பெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்கள் எவ்வளவு?

இவ்வளவு தொல்லைகளையும் உண் டாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை, சரியாய் 15 நாட்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்து விட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல் லப்படுவதாகவும் மதத்தின் முக்கிய பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகிறது.

இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பது தான்.

இந்த கார்த்திகைத் தீபப்பண்டி கையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர் வீரசைவர், ஸ்மார்த் தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.

சாதாரணமாகக் கார்த்திகை நட்சத் திர தினத்தை சுப்பிரமணியன் என் னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விர தங்களும், பூஜைகளும் நடத்தி வருகின் றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணா மலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப்பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங் கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக் காக, வைத்தீஸ்வரன் கோயில், குன் றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந் தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல் வங்களே பதினாயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும், ஆகும்போது பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?

இதில் எவ்வாறு பொருள் வீணக் கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்!

தீபாவளிக்காக வரவழைத்து விற் பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்குச் செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங் களிலும், காடுகளிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10000,1000000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!

கோயில்கள் என்பவைகளுக்குச் சொக் கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு!

கார்த்திகைப் பண்டிகைக்காக திரு வண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு?

இவ்வாறு பல வகையில் செலவு செய் யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பய னுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்.

இன்னும் இப்பண்டிகையினால் மக் களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்க வழக் கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-

ஒரு சமயம் அக்னி தேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங் கொண் டானாம்.

அதை அறிந்து அவன் மனைவி சுவாகாதேவி என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படு வான் என்று எண்ணினாளாம்

அதனால் அவள் வசிஷ்டரின் மனைவி யாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களை போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறை வேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாம்.

இந்த நட்சத்திர பெண்கள் தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி குழந்தை யாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார்களாம்! என்பது ஒருகதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூட நம்பிக்கையை பாருங்கள்.

பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் என்பது ஒன்று.

மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவைமட்டும் அல்லாமல் இயற்கைப் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூட நம்பிக்கையை உண்டாக்கும் துர்போதனை ஒன்று.

ஆகவே, இவற்றை ஆராயும்போது இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்

இனி, கார்த்திகையைப் பற்றிய இரண் டாவது கதையாவது:- ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச்சண்டையாக மூண்டு ஒருவ ரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தன ராம்.

அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம்.

ஆகையால் அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு, வானத் திற்கும் பூமிக்குமாக நின்றாராம்.

உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம், அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக் கடவுள் ஏ பிரம்ம விஷ்ணுகளே! இந்த ஜோதியின் அடி முடிகளை யார் முதலில் கண்டு வரு கிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரீ) வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவம்கொண்டு அடியைக் காண பூமி யைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம்.

அதைக் கண்டு பிரம்மன் தாழம் பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க; அது நான் பரமசிவனுடைய முடி யிலிருந்து கோடிக்கணக்கான வருஷங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன் நான் சிவனுடைய முடியைப்பார்த்து விட்டதாக சிவனிடத் தில் எனக்காக சாட்சி சொல்லுகிறாயா என்று கேட்க,அதுவும் சம்மதிக்க, இருவரும், பரமசிவனிடம் வந்து முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்ததாம்.

அதுகண்ட சிவன் கோபங்கொண்டு, இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம் மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது என்றும், தாழம்பூ இனி மேல் தனக்கு உதவாமல் போகக்கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.

பரமசிவனும் அதற்குச் சம்மதித்து ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதி யாகக் காணப்படுவேன் என்று சொன் னாராம்.

இதுதான் திருவண்ணாமலைப் புரா ணமாகிய அருணாசலப்புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரி யோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களைவிட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர்.

இந்தக் கதையைக்காட்டிச் சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப்புராணங்களும், தேவா ரங்களும், திருவாசகங்களும், தோத்தி ரங்களும் இல்லை. இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல இவ்வாறு மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற்காரணமாக இருப்பதை அறியலாம்.

இந்தக்கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்குள் ளேயே சண்டை வந்தது ஒரு விந்தை! இதுபோலவே ஆராய்ந்தால் பரிகாசத் திற்கும் வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அனேகம் செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறு இரண்டு முரண்பட்ட வேடிக்கைக்கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண் டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டு பக்தியும், மூட நம்பிக்கையும்; முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க மேலே கூறியகதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள் தான் சிவனுக்கு பெருமை கற்பிக்கிற தென்று நம்பி கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்களென்றால், வைண வர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளை மலந்தின்னும் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன் சிவனு டைய பாதத்தைக்கூட காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தியிருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெரு மையாகக் கொண்டாடச் சம்மதிப்பார் களா? இவர்கள் போகட்டும்,

ஏதாவது ஒரு கடவுளாவது இருக் கிறார் என்ற நம்பிக்கையில்லாததால் தானே கடவுள் என்னும் கொள்கை யுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப்பண்டிகை கொண்டாடுகிறார் களே! இதில்தான் என்ன அர்த்த மிருக்கிறது?

இவற்றையெல்லாம் யோசிக்கும் போது இவர்கள் முட்டாள் தனம் காரணமாக வாவது, வீண் ஆடம்பரம் காரணமாக வாவது இப்பண்டிகையைக் கொண்டாடு கிறார்கள் என்றுதான் நினைக்க வேண் டியதிருக்கிறது.

அல்லது அறிந்தோ அறியாமலோ நமது மக்கள் மனத்தில் பண்டிகைகள் புண்ணிய நாட்கள், அவற்றைக் கொண் டாடுவதால் புண்ணியம் உண்டு. கொண் டாடாவிட்டால் பாவம் என்னும் ஒரு குருட்டு எண்ணம் குடி கொண்டிருக் கிறது என்ற முடிவுக்குத்தான் வரவேண் டியிருக்கிறது,

ஆகவே, இதுபோன்ற பண்டிகை களால், நமது நாட்டில், பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண் காலப்போக்கும், நிறைந்திருப்பதை எடுத்துக்கூறத் தொடங்கிறவர்களுக்கு உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள் தேசத்துரோகி மதத்துரோகி வகுப்பு வாதி நாஸ்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர்.

சிறிதேனும் பொறுமைகொண்டு, சொல் லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை. இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடைய வராகச் செய்ய இதுவரையிலும், எந்த தேசியத் தலைவர்களாவது, எந்த தேசியத் தொண்டர்களாவது, எந்த தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக் கைக்கான விஷயங்களை, சுயராஜ் ஜியம் சுதந்திரம் காங்கிரஸ் பாரத மாதா மகாத்மா காந்தி காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச் சாரஞ் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங்களையும், விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்.

இவ்வாறு தேசிய பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கை யுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒருபுறமும், புராணப் பிழைப்புக்காரர்களும், குருக்கள்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

குடிஅரசு, தலையங்கம்

- 22.11.1931
http://www.viduthalai.periyar.org.in/20101119/news08.html
http://www.viduthalai.periyar.org.in/20101120/news07.html

No comments:


weather counter Site Meter