Pages

Search This Blog

Wednesday, September 22, 2010

பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரை

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் நேற்று (21.9.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை மய்யப்படுத்தி, அதன் சாராம்சத்தை எடுத்துக்காட்டிய விளக்கவுரையாக அது அமைந்திருந்தது.

பொதுவாக தந்தை பெரியார்பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின்மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டதுபோலவும், கருத்துகளைச் சொன்னதுபோலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது.

தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப்பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

இதன் பொருள் ஆங்கிலத்திற்கு நிகராக தமிழும், விஞ்ஞான மொழியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதானே தவிர, தமிழை அவமானப்படுத்தியதாகவோ, தரம் தாழ்த்தி சொன்னதாகவோ பொருளாகாது.

தமிழையும், மதத்தையும் தனியே பிரித்துவிடவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதையும், மதச் சார்பற்றவர் களுக்குத் தமிழில் இருப்பது எது என்று தந்தை பெரியார் வினா எழுப்பியதையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.

தமிழ் மொழியிலிருந்து புராணங்களையும், இதிகாசங் களையும் கழித்துவிட்டால், எஞ்சி நிற்பது எதுவாக இருக்கும் என்பது அர்த்த வளமிக்க வினாவாகும்.

மதம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்று புரட்சிக்கவிஞர் பாடியதும் இந்த அடிப்படையில்தான்.

நமது தமிழ்ப் புலவர்களுக்குப் புராண ஞானம் இருக்கும் அளவுக்கு பொது ஞானமோ, அறிவியல் ஞானமோ இருப்பதில்லையே என்று தந்தை பெரியார் கூறியதும், நமது புலவர்களின் அறிவு காலத்துக்கேற்ற அளவு மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

தமிழிலேயே வருணம் புகுத்தப்பட்டு இருப்பதுபற்றி தந்தை பெரியார் கேட்கிறார். மக்கள், தேவர், நாகர் உயர்திணை என்று தமிழ் இலக்கணத்திலேயே கூறப் பட்டுள்ளதே என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு அன்றைக்கு அய்யாவோடு இருந்த திரு.வி.க., நமசிவா யனார், கந்தையா போன்ற புலவர்கள்முதல் இன்றுவரை உள்ள புலவர்களும் விடையிறுத்ததில்லையே!

இந்த இடத்தில் இன்னொன்றும் முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்கது ஒன்றுண்டு. பாக்களில் சிறந்ததான வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாடவேண்டும்; அரசனுக்கு ஆசிரியப்பா, வைசியருக்கு கலிப்பா, சூத்தி ரருக்கு வஞ்சிப்பா என்று வருணப் பிரிவை இலக்கணத்தில் (வச்சணந்தி மாலை) திணிக்கப்பட்டுள்ளதே!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் (சத்திரியர்) என்றும், அடுத்த நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் இலக்கணம் கூறப்பட்டதற்கு என்ன சமாதானம்?

தந்தை பெரியார் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்; ஒன்றின் மீது வினாவை எழுப்புகிறார் என்றால், அது நோய்நாடி, அதன் முதல் நாடுவதாகத்தான் இருக்கும்.

லென்ஸ் வைத்து தந்தை பெரியார் படித்ததுபற்றி கூறிய விடுதலை ஆசிரியர் அவர்கள், நமது இலக்கியங்களில், புராணங்களில் நெளியும் கிருமிகளைக் கண்டுபிடிக்கத் தான் என்று நயத்தோடும், அதேநேரத்தில் ஆழ்ந்த பொருளோடும் கூறினார்.

ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச்சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது.

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன?

இலக்கியம் முதல் இனக் கோட்பாடுவரை எதைத் தொட்டாலும் தந்தை பெரியார் தன்னிகரற்ற சூரியனாகவே தகிக்கிறார் என்பதுதான் உண்மை! உண்மையிலும் பேருண்மை!!

No comments:


weather counter Site Meter