Pages

Search This Blog

Friday, September 24, 2010

சிலிர்க்கட்டும் சீர்காழி!மானமிகு தோழர்களே, சீர்காழி அழைக்கிறது வாருங்கள். வரும் 27ஆம் தேதி மாலை சீர்காழி நகரம் சீர்திருத்தத்தையும் கடந்து புரட்சிப் பூபாளம் பாடும்போர் மறவர்களின் - புது புறநானூறு அரங்கேற்றம்.

சிலிர்க்கட்டும் சீர்காழி!
மானமிகு தோழர்களே, சீர்காழி அழைக்கிறது வாருங்கள். வரும் 27ஆம் தேதி மாலை சீர்காழி நகரம் சீர்திருத்தத்தையும் கடந்து புரட்சிப் பூபாளம் பாடும்போர் மறவர்களின் - புது புறநானூறு அரங்கேற்றம்.
திருவாரூர் மண்டல திராவிடர் கழக மாநாடு சீர்காழியில் நடைபெற உள்ளது. இந்த சீர்காழி இயக்க வரலாற்றில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளையிட்ட காளான் அல்ல!
இயக்க வரலாற்றில் சீர்காழிக்கென்று சீர்மிகு அத்தியாயம் உண்டு.
அதன் நுனியைத் தொட 75 ஆண்டுகள் பயணிக்க வேண்டும். 1935 ஜூலை 9ஆம் தேதி இதே சீர்காழியில் ஊழியக்காரன் தோப்பில் தஞ்சை மாவட்ட ஆதிதிரா விடர் முதலாவது அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
மாநாட்டுத் தலைவர் யார் தெரியுமா? தஞ்சை ஜில்லா மிராசுதாரும், கிழக்குத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவருமான என்.ஆர்.சாமியப்பா முதலியார்; திறப் பாளரும் சாதாரணமானவர் அல்லர். சென்னை மாநில இரண்டாவது அமைச்சர் - பி.டி.ராஜன் பார் அட் லா ஆவார்.
இரண்டாம் நாள் வாலிபர்கள் மாநாடு. அன்ன பூர்ணி அம்மையார் தலைமை வகிக்க - தோழர் ஈ.வெ.ராமசாமி (குடிஅரசு, 7.9.1935 அப்படிதான் குறிப்பிடுகிறது) திறந்து வைத்தார்.
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, பூவாளூர் பொன்னம்பலனார், மஞ்சுளாபாய், கே.எம். பாலசுப்பிரமணியம், சித்தர்க்காடு ராமையா என்று பெரும் தளகர்த்தர்கள் எல்லாம் அம்மாநாடுகளில் அரிமா முழக்கமிட்டுள்ளனர்.
சாமியப்ப முதலியார் மிராசுதார் ஆயிற்றே - பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியைச் சேர்ந்தவர் ஆயிற்றே. அவர் ஆதிதிராவிடர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிலாமா என்று அவசரப்பட்டு ஆரா திக்கும் கத்துக்குட்டிகளுக்கு நமது அய்யா, அன்றே அந்த மாநாட்டிலேயே தலைவரை வழிமொழியும் பாங்கில் பளார் என்று தெரிவித்தும் விட்டார்.
தோழர் சாமியப்பா அவர்கள் பொதுவாகப் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக சொல்லப்படும் சமூகத்திலுதித்தவரும், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்துவதில் முதல் பட்டம் பெற்ற சமூகத் திலுதித்தவருமான தோழர் சாமியப்பா ஆதிதிராவிடர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து வந்த பெரிய தியாகம் என்று குறிப்பிட்டது சாதாரணமானதன்று.
நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிட்டா மிராசு தார்களாக இருந்தாலும் அதன் ரிங் மாஸ்டராக இருந்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே - அவர் கண்காணிப்பாலும், கருத்து ஒளியாலும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு தலையாய பணிகளை அர்ப்பணித்த மனப்பான்மையுடன் செய்தனர் என்பது தான் தனிச் சிறப்பாகும். அந்த மகாநாட்டில் 21 தீர்மானங்கள் என்றால், மகாநாட்டின் மகத்தான சிறப்புக்கு வேறு கட்டியமும் கூற வேண்டுமோ!
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றவர் அண்ணல் அம்பேத்கர். வருணாசிரம வாதியான காந்தியாரின் பிடிவாதத்தால் அது தட்டிப் பறிக்கப்பட்டது.
அந்த நெருக்கடியான நேரத்திலும் ஒரு காந்தியா ரின் உயிரைவிட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நலனே முக்கியம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அய்ரோப்பிய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த தந்தை பெரியார் தந்தி ஒன்றும் கொடுத்தார் என்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய உன்னதமான தகவலாகும்.
சீர்காழி ஆதிதிராவிடர் மாநாட்டின் 3ஆவது தீர்மானம் அது தொடர்புடையதே!
பூனா ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டுத் தொகுதியில் நம்மவர்கள் நலத்திற்கென உழைத்துவரும் தோழர்கள் சுயராஜ்ய அரசியலில் இடம் பெற முடியாமல் கஷ்டப் படுவதைத் தடுப்பான் வேண்டி மேற்படி கூட்டுத் தொகு தியை விலக்கும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு தீர்மானமும் ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை நோக்கிய அரிமா அணிவகுப்பாகும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர் கழகம் என்ன செய்தது என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று குறைப் பிரசவ கூச்சல்காரர் களுக்குச் சீர்காழி மாநாடு செவுளில் அறை கொடுப்பது போன்றதாகும்.
பார்ப்பனர்களுக்கு முந்திய தமிழிசை மூவர்கள் முத்துத்தாண்டவரும், அருணாசல கவிராயரும், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளையும் இசைமாரி பொழிந்த பூமி இது.
நமது நெடுநாளைய கோரிக்கையை ஏற்று மானமிகு கலைஞர் அரசால் நம் தமிழின இசை வித்தகர்களின் பெயரால் பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் எழுப்பிட அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
மூடநம்பிக்கையின் முற்றமும் இந்தச் சீர்காழியில் உண்டு. அப்பன் சின்னசாமி அய்யர் குளத்தில் குளிக்கச் செல்லும் முன் மகன் திருஞானசம்பந்தனை படித்துறை மேல் படிக்கட்டில் நிற்க வைக்க, பாலகன் பாலுக்கழ, பார்வதி தேவியார் கீழே இறங்கி வந்து ஞானப்பால் ஊட்ட தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாட லைப் பாடத் தொடங்கினான் என்கிற பார்ப்பனர்களின் சரடுதான் அந்த மூடநம்பிக்கை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பூம்பாவை திரைப்படத்திலே இந்த அருள் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார்.
கலைவாணர்: சின்னவயதிலே கன்னித்தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறியே வேட்டு!
மற்றவர்கள்: அன்னை பார்வதி அன்புடன் பாலை
அவர்க்களிக்க வந்தாள்; ஞானம்
அப்பொழுதே தந்தாள்
மண்ணில் சைவ மதமே
தழைக்க மழையெனவே...
கலைவாணர்: உழைப்பதன் வெற்றிப் பயனே அருளாம்
உண்மை தெரிந்திடா
விளைவும், மோட்சம் கடவுள் கூட்டம்
வீணான வார்த்தையடி!
அருளாள் பிழைப்போமா?
பொருளால் பிழைப்போமா?
உடுமலை நாராயண கவி பாடல் எழுத, கலை வாணர் கிண்டலடிப்பார்.
வருடா வருடம் சீர்காழியிலேயே பார்வதி ஞானப் பால் ஊட்டியதாகக் கதையளக்கும் திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மும்பையிலே திலகர் என்ற பார்ப்பனர் கட்டிவிட்ட அழுக்கு மூட்டையான பிள்ளையார் ஊர்வலத்தைத் தமிழ்நாட்டிலும் இறக்குமதி செய்துள்ளனர்.
மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும் பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்ல முடியாது என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு, 8.10.1933)
மதங்களின் இந்த மூடப் பிரச்சாரத்தை பகுத்தறிவுப் பிரச்சாரத்தால்தான் முறியடிக்க முடியும்.
வரும் திங்களன்று சீர்காழியில் மண்டல மாநாடு மட்டுமல்ல - அதனையொட்டியே மாபெரும் மூடநம் பிக்கை ஒழிப்புப் பேரணியும் இடம்பெறும்.
ஜெயிப்பது யார் பிள்ளையார் கூட்டமா, பெரியார் பெரும்படையா என்பதைக் காட்டுவோம், வாருங்கள் கருஞ்சட்டைத் தோழர்களே!
வகுப்புரிமையின் சிற்பி எஸ்.முத்தையா முதலியார் சீர்காழி மண்ணுக்குச் சொந்தக்காரர். சீர்காழியை யடுத்த குரும்பக்குடி மிராசுதார் அவர்.
வகுப்புரிமைத் திசையில் முதல் ஆணையை 1928இல் பிறப்பித்து ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்த பெருமகன் அவர். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பிறக்கும் ஒரு குழந்தைக்கு முத்தையா என்று பெயரிடுங் கள் என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால் அந்தப் பெருமகனாரின் பெருமைக்கு வேறு எந்த வைர முடிவேண்டும்?
தமிழ்நாட்டில் செயல்பாட்டிலிருந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துக என்று தந்தை பெரியார் களம் இறங்கி போராடிய அந்தத் தருணத்தில், நமது முத்தையா முதலியார் என்ன சொன்னார் தெரியுமா?
இந்தத் தீமை அகற்றப்பட மய்ய அரசு முன்வர வில்லை என்றால் இந்தியாவிலிருந்து சென்னை மாநிலம் பிரிய வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தார் என்றால் சாதாரணமா?
அந்த சமூக நீதிச் சிற்பியின் உருவப் படத்தைத் திறந்து அவரின் சொந்த மண்ணிலே சமூக நீதி சங்கநாதம் செய்ய உள்ளார் நமது தமிழர் தலைவர்.
கருஞ்சட்டைக் குடும்பத்திலே பிறந்து - இன்றைய தினம் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலே அங்கம் வகிக்கும் மானமிகு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் பங்கேற்க உள்ளார்.
வயது 95இல் அடி எடுத்து வைத்தாலும் வாலிபர் போல நடைபோடும் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகு எஸ்.எஸ்.மணியம் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். கழக முன்னணியினர் பங்கேற்ற உள்ளனர்.
மண்டல மாநாடு என்றாலும் மாவட்ட மாநாடு போல ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சுவர் எல்லாம் மண்டல மாநாட்டை பற்றிப் பேசுகின்றன. எங்குப் பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள்.
தேநீர்க் கடைகளிலும் பேருந்து நிலையங்களிலும் மாநாட்டைப் பற்றிதான் மக்கள் பேச்சு.
சமூக நீதிக் களத்திலே சாதிக்க வேண்டியவை இன்னும் பல உண்டு. ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிலும் நமது பயணம் தொடர வேண்டியுள்ளது. பெரியார் வலம்வந்த மண்ணிலே காவிக் கூட்டத்திற்கு இடம் இல்லை என்று காட்ட வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.
இந்தக் கடமைகள் அழைக்கின்றன - வாலிபர்களே வாருங்கள், வாருங்கள் - இளைஞர்களே கூடுங்கள், கூடுங்கள்! தாய்க்குலமே அணிவகுத்து வாருங்கள்; தொழிலாளர்களே தோள் தூக்கி வாருங்கள்! மாணவப் பட்டாளமே மார்பு நிமிர்த்தி வா!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்களே, கழகத்தின் அழைப்புக்குக் காதுகளைக் கொடுங்கள்!
சிங்கநாதம் கேட்கட்டும்!
சீர்காழி சிலிர்க்கட்டும்!!
வாரீர்! வாரீர்!!
- மின்சார

No comments:


weather counter Site Meter