Pages

Search This Blog

Showing posts with label நுழைவு தேர்வு. Show all posts
Showing posts with label நுழைவு தேர்வு. Show all posts

Wednesday, March 9, 2011

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை

இந்தியா முழுமையும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திடும் முடிவை அகில இந்திய மருத்துவக் குழு தன்னிச்சையாக அறிவித்தது.

தொடக்கத்தில் அந்த முடிவுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு- தி.மு.க. ஆளும் தமிழ்நாடு அரசு மற்றும் சில மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போர்க்கொடி உயர்த்தின.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டும் விட்டது.

இந்த நிலையில், மத்திய மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் சென்றது. மத்திய அரசு புதிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலங்களைக் கலந்துகொண்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. இந்த வழக்கில் தி.மு.க. அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.

மத்திய மருத்துவக் குழுவுக்கு அதிக அதிகாரமா? மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? என்ற கேள்விக்கிடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் தான்.

அரசுக்கு மேலாக சில குழுக்கள் இருந்துகொண்டு மேல் வருண மனப்பான்மையுடன் நடந்துவருகின்றன. மக்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளவேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் அரசுதானே தவிர, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகள் அல்ல - அவர்கள் கொழுத்த சம்பளத் தைத் தின்றுகொண்டு குளிர்பதன அறையில் சொகுசான அனுபவத்தில் திளைக்கக் கூடியவர்கள்.

நியாயமாக இதுபோன்ற குழுக்களில் கூட அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பிரதமருக்கு ஆலோசனை கூறிடக் குழு ஒன்று உண்டு (முடிறடநனபந ஊடிஅஅளைளடி) அதில் பார்த்தாலும் சமூகநீதி என்றால், இளக்காரமாகப் பார்க்கும் மெத்தப் படித்த பேர்வழிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அனுமதி வழங்காத நிலையில், மருத்துவக் கவுன்சில் தானடித்த மூப்பாக நடந்துகொள்வது சரியானதுதானா?

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளே மருத்துவக் கல்லூரிகளை நிதி நெருக்கடியையும் சந்தித்து நடத்திக்கொண்டு இருக்கின்றன.

அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும். இதில் தலையிடுவதற்குத் தார்மீக ரீதியில் எந்தவித உரிமையும் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது.

மத்திய தொகுப்பு என்று கூறி, பிற மாநிலங்களில் உள்ள மொத்த எண்ணிக்கையில் (எம்.பி.பி.எஸில்.) 15 சத விகிதத்தை எடுத்துக் கொள்கிறது. முதுநிலைப் படிப்புக்கோ 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்து கொள்கிறது.

ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் நுழையவிட்டால், அதற்குப் பிறகு கூடாரமே அதன் கைக்குப் போய்விடும்.

மாநில மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் சில சதவிகிதங்களை மாநில அரசுகள் கொடுக்கப் போய், கடைசி யில் உள்ளதும் போச்சே என்று கைபிசையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இந்தத் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபட கல்வி என்பது பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி பொதுப் பட்டியலுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு கிடையாது என்று அறுதியிட்ட பின்பு, சென்னை உயர்நீதி மன்றமும் அந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்தபின், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டில் திணிக்க இவர்கள் யார் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.

கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக் குறித்துத் தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும், நேற்று நாளேடுகளில் வெளிவந்த தகவலுக்கும் முரண்பாடாக உள்ளது.

நுழைவுத் தேர்வை நடத்துவதா? கூடாதா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன் றம் சொன்னதாகத் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. நேற்று காலை ஏடுகளின் சேதியோ நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்ற உத்தரவு என்று வெளிவந்துள்ளது.

இதற்கிடையே நேற்று பிற்பகல் - நுழைவுத் தேர்வு கிடையாது; கல்வித் துறை அறிவிப்பு என்று தொலைக் காட்சிகள் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டன.

இன்று காலை செய்தியோ வேறுவிதமாக உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இருந்தால் நடத்தலாம். அப்படிக்கில்லாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாகக் கருதினால் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்டு செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதாகச் செய்தி வெளியாகி யுள்ளது.

இது என்ன தீர்ப்பு?

இதைவிடகுழப்பமான உத்தரவைக் கண்டுபிடிப்பது கடினமே!

எது எப்படியாக இருந்தாலும் நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடம் கிடையாது - கிடையவே கிடையாது. காரணம், சமூகநீதிக் கதிரவன் தந்தை பெரியார் உதித்த மண் இது. அவர் கண்ட திராவிடர் கழகம் சமூகநீதி வாளினைக் கையில் இன்றளவும் ஏந்தி நிற்கும் பூமியாகும் - எச்சரிக்கை!

http://viduthalai.in/new/page-2/5040.html

weather counter Site Meter