Pages

Search This Blog

Showing posts with label சுவாமி சிவானந்த சரஸ்வதி. Show all posts
Showing posts with label சுவாமி சிவானந்த சரஸ்வதி. Show all posts

Monday, November 22, 2010

ஞானசூரியன் தொடர்-3

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.

இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த

1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.

நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.

அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.

இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.

எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்

1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.

அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.

இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,

பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்

சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்

அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர

புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.

1சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.

1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.

இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.

ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.
http://www.viduthalai.periyar.org.in/20101122/news11.html

weather counter Site Meter