சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.
அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்
முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.
இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.
இந்து முன்னணியே! இந்து முன்னணியே! இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!
------------மின்சாரம் அவர்கள் 10-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_11.html
