Pages

Search This Blog

Saturday, July 30, 2011

வேதம் ஓத மறுத்தவர்களை வீட்டுக்கு அனுப்பிய மகாராஜா!

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் ஆட்சி செய்த மன்னர் சாகுமகாராஜா (1874-1922) அந்த மண்டலத்தில் அதிகாரப்புரி அனைத்தும் அக்கிரகாரத்தில் பிறந்த பூணூல்களிடத்தில்தான்.

மண்ணின் மைந்தர்களான மராத்திய மக்களோ வெறும் எடுபிடிகள்தாம்.

1884 இல் மன்னராக பொறுப்பேற்றதும் அதிரடியாக அவர் பிறப்பித்த ஆணை - அனைவரும் ஜாதி வேறுபாடு இல்லாமல் வேதம் கற்பிக்கப் பாடசாலைகளைத் திறந்ததுதான்!

ஒவ்வொரு நாளும் பஞ்ச கங்கை நதிக்குக் குளிக்கச் செல்வார் மன்னர். அப்பொழுது பார்ப்பனர்கள் தோத்திரங்களைப் பாடுவார்கள் - அவை எல்லாம் புராணங்களிலிருந்துதான் -வேதங்களிலிருந்து அல்ல; காரணம் சூத்திரனான சாகு மகாராஜாவுக்குப் புராணங்களில் இருந்துதான் தோத்திரங்களைப் பாடுவார்களாம் - வேதங்களை ஓதக்கூடாதாம்!

அரண்மனைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளில்கூட வேதங்கள் இடம் பெறாது - புராணங்கள்தான்! மன்னருக்கு மகா சினம் வந்தது. நம்மிடம் கூலி வாங்குகிறவர்களுக்கு இவ்வளவு திமிரா - இனி அரண்மனைகளிலும், மற்ற காரியங்களிலும் வேதங்கள்தான் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார். அவ்வாறு செய்யாதவர்களின் வேலை சீட்டுக் கிழிக்கப்படும் என்பதுதான் அந்த ஆணை.

மன்னரின் உத்தரவுக்குப் பார்ப்பனர்கள் பணியவில்லை.

விளைவு!

பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் எல்லாம் பறி முதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரம் முழுவதும் அதிகார வர்க்கத்தில் இருந்த பார்ப்பனர்களை எல்லாம் ஒன்று சேர்த்து எதிர்த்துப் பார்த்தனர் பார்ப்பனர்கள். ஒன்றும் நடக்கவில்லை.

சிவாஜியின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் சாகு மகராஜ். ஆனால் சிவாஜியை சூத்திரன் என்று கூறி தர்ப்பைப் புல் முன் தலை குனிய வைத்தது போல் சாகு மகராஜாவிடத்தில் பருப்பு வேகவில்லை.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பார்ப்பனர்களின் மண்டையில் மரண அடி கொடுத்தது என்பது சாதாரணமா?

1902 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலில் (ஜூலை 26) ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் அரசர் சாகுமகராஜ்.

தனது பரிபாலனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆணை!

பார்ப்பனர் அல்லாதார் வரலாற்றில் இது ஒரு திருப்பம் தரும் சமூக நீதி ஆணை என்பதில் அய்யமில்லை.

1891 ஆம் ஆண்டில் கோலாப்பூரில் 71 அலுவலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். இந்த உத்தரவுக்குப் பிறகு 1912 இல் 95 அலுவலர்களில் 60 பேர் பார்ப்பனர் அல்லாதார் என்றால், அதன் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சாகு சாதாரணமானவர் அல்லர். சமூக நீதிக்கு வித்திட்ட மகாராஜாதான்!

No comments:


weather counter Site Meter