Pages

Search This Blog

Sunday, March 18, 2012

நித்யானந்தாவே, ஓடாதே நில்

நித்யானந்தா, நித்யானந்தா என்ற ஒரு காஷாயதாரி சென்னைக்கு வந்து ஆடம்பரமான ஓட்டலில் தங்கி அட்டகாசமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த அவசியம் அவருக்கு ஏன் வந்தது? தான் உத்தம புத்திரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசரமான நெருக்கடிப் பிரசவம் ஏன் ஏற்பட்டது?

திராவிடர் கழகத் தலைவரை ஏன் இப்படி விழுந்து பிராண்டுகிறார்?

திராவிடர் கழகம் இது போன்ற காஷாயதாரிகளின் கபட கபாலங்களை நொறுக்கி வருகிறதே என்ற ஆத்திரத்தால், ஆபாச ஆசாமியைக் கைது செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த ஆத்திரத்தால்தானே!

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து சேற்றை வாரி இறைப்பதற்கு முன், முதலில் அவரின் சீடர்களுக்கு ஏற்பட்ட கோபத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

நடிகை ஒருவருடன் இவர் நடத்திய கோபால கிருஷ்ண லீலைக் காட்சியைத் தொலைக் காட்சியில் பார்த்த பக்தர்கள்தானே, சீடர்கள்தானே நித்யானந்தாவின் ஆசிரமங்களை நாடெங்கும் சூறையாடினார்கள்? தீவைத்துக் கொளுத்தினார்கள்? அதனைக் கண்டிக்கத் துப்பில்லை - ஆசிரியர் வீரமணி அவர்களின் மீது ஆக்ரோஷமாகப் பாய்வானேன்?

இவர் யோக்கிய சிகாமணி என்றால், குற்றமற்ற கோமான் என்றால், ஏன் வடக்கே ஓடித் தலைமறைவாக வேண்டும்?

கொலைகாரர்கள் கூட நாணயமாக நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒரு நிலையில், ஆண்டவனோடு நேரில் அளவளாவும் இந்த ஆசாமி ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

இவரது பரமார்த்த சீடர் ஒருவர் அமெரிக்கர். அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்தச் சாமியார்களின் வேட விளக்கில் விட்டில் பூச்சிகளாக வீழ்கிறார்கள்.

அந்த அமெரிக்க சீடர் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தா பற்றி புகார் கொடுத்துள்ளாரே - மறுக்க முடியுமா?

அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும் போது என்னைத்தான் பாதுகாவலாக நிறுத்தி வைப்பார்; நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகை கூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந்தார். அந்த நடிகைக்கும், நித்யானந்தாவுக்கும் செக்ஷூவல் ரிலேஷன்ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக்கிட்டேன். அதைப் பற்றி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே அவரின் அமெரிக்க அந்தரங்க சீடர்.

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களுடன் குரூப் செக்ஸ் வச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக அவர் இருந்ததை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.

சனாதன கோவிலில் நித்யானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக் கிரகத்துக்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கும். அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக மான அறை அது என்று அவரின் சீடர்தானே விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகை நித்தியானந்தாவின் பல ஆபாச அணுகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறது. "நான் கிருஷ்ணன். நீ என்னோட கோபிகை!" என்ற வசனத்தைத்தான் பக்தைகளிடம் அடிக்கடி கூறுவாராம் இந்த நித்தியானந்தா. (அதாவது நித்யமும் ஆனந்தமாக இருக்கும் ஆசாமி என்றும் பொருள் கொள்ளலாம்).

பாலுறவு மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தினார் என்றால் இந்த ஆசாமி எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும். இந்த ஆபாசமான தகவல்கள் கருநாடக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

இவையெல்லாம் தவறான தகவல்கள் என்று நீதி மன்றத்தில் நிரூபித்து நிரபராதி என்று வெளியில் வருவதுதான் யோக்கியர்க்கு அழகு. தேவையில்லாமல் ஆத்திரத்தின் அலை மோதலில் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுவது ஏன்? (பாவம்! ஆழம் தெரியாமல் காலை விட்டுப் பார்க்கிறார், புலி வாலை மிதிக்கப் பார்க்கிறார்.)

வீரமணியிடம் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு நெளிந்து வளைந்து ஏதேதோ வார்த்தைகளைப் போட்டுக் குதப்பி (அவர் பேட்டி . . பதிவு செய்யப்பட்டுள்ளது - நம்மிடம் உள்ளது.) கடைசி கடைசியாக ஆரோக்கிய மானதாக இருந்தால் தயார்தான். ஆனாலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விடுமே என்று அஞ்சுகிறாராம்.

நித்யானந்தா போன்றவர்களிடம் வாதிட திராவிடர் கழகத் தலைவரா வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு தேதியையும் இடத்தையும் சொன்னால் திராவிடர் கழகத்தின் தொண்டர் ஒருவரை அனுப்பி வைக்கத் தயார்! தலைவர் வீரமணியின் பொதுவாழ்க்கை வயதுகூட உம் வயது கிடையாதே!

சங்கராச்சாரியார் போன்றவர்கள் விவாதத்துக்கு வந்தால் அப்போது வேண்டுமானால் திராவிடர் கழகத் தலைவர் நேரிடையாக விவாதிக்க வருவது பற்றி யோசிக்கலாம்.

கடைசியாக ஒன்று. நித்யானந்தா போன்ற காஷாய தாரிகள் அந்தராத்மாவோடு நேரடியாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!

(1) அத்தகையவர் எப்படி குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றார்?

(2) தன்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. பகவானே நீயே பார்த்துக் கொள் என்று சிவனே என்று இல்லாமல் எதற்காக வக்கீல்களைத் தேடுகிறார்? பத்திரிகையாளர் களுக்குப் பேட்டி கொடுக்கிறார்?

(3) ஏன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓடி ஒளிய வேண்டும்? (அங்குதான் கைது செய்யப்பட்டார்!)

(4) அப்படி என்றால் இவருக்கே, தான் நம்புவதாகக் கூறும் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்வாரா?

அய்ம்பொறிகளையும் மூடிக் கொண்டு ஒழுங்காக இருந்தால் வண்டவாளங்கள் எல்லாம் மறுபடி தண்ட வாளத்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே!

பணத்திமிரும், பாலியல் உணர்வில் திகட்டிப் போகாத வாலிபக் கொழுப்பும், நாட்டு அரசியல் மாற்றங்களும் மறுபடியும் வாலாட்ட வைத்துள்ளது - விளைவு வட்டியும் முதலுமாகக் கிடைக்கப் போவதுதான் மிச்சம் - சட்டம் தன் கடமையைச் செய்யுமே!

மின்சாரம் 
http://viduthalai.in/page-8/30211.html 

1 comment:

Unknown said...

I am ready to argue with u.


weather counter Site Meter